Thursday, August 25, 2011

பஞ்ச தந்திரதிலிருந்து ஒரு கதை

இருதலைகள் கொண்ட பறவை



முதலில் பஞ்ச தந்திரம் என்றால் என்ன?

1.மித்திர பேதம் - நட்பை கெடுத்து பகை உண்டாக்குவது
2.மித்ரலாபம் - தங்களுக்கு இணையானவர்களுடன் கூடி பகை   
                                 இல்லாமல் வாழ்வது
3.சந்தி விக்ரகம் -பகைவரை உறவு கொண்டு வெல்லுதல்
4.லப்தகாணி (artha nasam) -கையில் கிடைத்ததை அழித்தல்
5.அசம்ரெஷிய காரியத்துவம் - எந்த காரியத்தையும் விசாரணை 
                                                                   செய்யாமல் செய்வது.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணு சர்மாவால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 86 கதைகளின் தொகுப்பே இந்த பஞ்ச தந்திர கதைகள். விலங்குகளை கொண்டு மனிதனுக்கும், ஏன் அரசனுக்கும் அறம் போதிக்கும் கதைகள் இவை. 

எடுத்துக் கொண்ட கதைக்கு வருவோமா.


அழகான ஒரு ஏரியின் கரையில் , அதிசயமான ஒரு பறவை வாழ்ந்து வந்தது, அதற்கு ஒரு உடல், இரண்டு தலைகள். இரண்டு தலைகளும் , ஒற்றுமையாக நேசம் கொண்டு பல நாட்கள் வாழ்ந்து வந்ததன. 

ஒரு நாள் , அமுதம் போன்ற ருசியான ஒரு பழத்தை ஒரு தலை கண்டது. எடுத்து ருசித்ததும், "ஆகா என்ன சுவை" என்றது மற்றொரு தலையிடம். இதைக் கெட்டு மற்றொரு தலை "எனக்கும் கனி தா" என்றது கனிவாய்.

பழத்தின் சுவையில் மயங்கிய அந்த தலையோ, "நம் இருவருக்கும் உடல் ஒன்று தானே, நான் தின்றால் என்ன? நீ தின்றால் என்ன?" என்றது. இது நாள் வரை எல்லாவற்றையும் பகிர்ந்து உண்டுவந்த அந்த தலைகளுக்குள் இப்படி பகை மூண்டது.  

ஏமாந்த தலை பழி வாங்கும் தருணம் பார்த்து காத்து இருந்தது. ஒரு நாள் , விஷக் கனி ஒன்று அதன் கண்ணில் பட்டது. அதை அந்த தலை உண்ணப் போவதைப் பார்த்ததும், பதறிப் போய் கத்தியது மற்றொரு தலை "உண்டு விடாதே , இருவருக்கும் ஆபத்து" என்றது. ஆனால் பழிவாங்கும் உணர்ச்சியில் 
அதைக் கேட்காமல் ஏமாந்த தலை உண்டு விட்டது. அந்த பறவை இரு தலைகளும் தொங்க இறந்து விழுந்தது. 

இந்த கதையிலிருந்து பல கருத்துக்களை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொருவரும் தங்கள் புரிந்து கொள்ளல் மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப தங்கள் வாழ்வின் பல நிகழ்ச்சிகளுக்கு வேறு வேறு கோணங்களில் பொருத்தி பார்க்க முடியும். "அமுதமே ஆனாலும் அதை பகிர்ந்து உண்ண வேண்டும்" ,"துணை என்பது அவசியம்-ஒருவருக்கு ஒருவர் பகை இல்லாமல் இருத்தலும் அவசியம்"என்பதே இக்கதையின் அடிப்படை கருத்து. 


உங்களுக்கு இப்படி கதை சொல்லி கருத்து கந்தசாமி என்று பெயர் எடுக்கும் ஆசை இல்லை. எனக்கு ஒரு மலையாளப் பாட்டு பிடிச்சு இருந்தது. அதை கேட்கச் சொன்னா ஒண்ணுமே புரியலைன்னு கேட்காம ஓடிருவிங்க, அதுக்குத்தான் இந்த கதை. இந்த பாட்டுல இந்த கதையை அசல் மலையாள நடையில் எவ்வளவு அழகா நெடுமுடி வேணு அவர்கள் பாடுகிறார், கேளுங்கள்.


தாளம் என்ற ஜோப் எனும் இளம் பாடகனின் ஆல்பத்தில் இந்த பாடல் இடம் பெறுகிறது. நம் கமலின் "சுந்தரி நீயும்" குரல் போல லேசாக தோன்றுகிறது. 



உங்கள் மூளைக்கு ஒரு கருத்தும் , இதயத்திற்கு ஒரு நல்ல பாட்டும் கொடுத்து விடை பெறுவது

                                  உங்கள் பெரமு 

1 comment:

Peram said...

நன்றிகள் முனைவர்.நா.கணேசன் அய்யா அவர்களுக்கு.

>பெரமு,
>கண்டபேரண்டம் என்னும் பறவை.
>சிந்து சமவெளி கடைசிக்கால >முத்திரைகளில்
>உண்டு.
>கலித்தொகையில் இருக்கிறது.
>இருதலைப்புள்ளின் ஓருயிரம்மே
>(கலித்தொகை: 12:5)
>ஓருயிர்ப்புள்ளின் இருதலை
>(கலித்தொகை: 89: 4)
>பிரிவரும்புள் என்று கொங்குவேள்
>தன் பெருங்கதையில் சொல்கிறார்.

நா. கணேசன்