முன் வாசல்


எதற்காக இந்த வலைப் பூ?


ஆயிர கணக்கான வலைபூக்கள் 
இணையம் எங்கும் கொட்டி கிடக்க 
எதற்காக இந்த வலைப்பூ ..?!

தத்துவங்களுக்காக இல்லை 
பொய்களை சொல்லி இதயங்களை 
கொள்ளையடிக்கவும்  இல்லை
எனை பறைசாற்றி கொள்ளவும் இல்லை 

கடந்த காலம் ஏற்றி வைத்த 
கனங்களை நிகழ்காலத்தில் 
சுமத்தி வருங்காலம் எனும் 
கனவு கோட்டைக்கு இத்துனை நாள்
வழி அனுப்பி வந்தேன் - நெற்றி 
கண் திறந்ததோ ? ஞான கண் 
திறந்ததோ ? தெரியாது !
இல்லாத கோட்டைக்கு - சுமை 
தூக்கி வருவதாய் ஓலை ஒன்று 
வந்தது ...................!
இனி என்ன செய்ய !
ஏற்றி வைத்த சுமைகளை 
இறக்கி வைப்பதன்றி !
இறக்கி வைப்பதன் சுகத்தை 
உங்களுக்கும் நான் 
உணர்த்திவிட்டால் - அன்று 
கிடைக்கும் எனக்கோர் 
உண்மை வெற்றி ...!
(எனவே ,,,,, இந்த வலைப்பூ)
சில நேரம் கொஞ்சம் எனக்காகவும் 
நிறைய என் தோழர்களுக்காவும் 
சில நேரம் நிறைய எனக்காகவும் 
கொஞ்சம் பிறருக்காகவும் 

எத்தனையோ வண்ண 
வலைப்பூஞ்சோலைகள் 
வேடந்தாங்கலாய் ...!
என் தொட்டதுக்கான வேலையோ   
இப்போதுதான் ஆரம்பம்..!

பிறகு,
என் கிறுக்குத்தனங்களை 
கிறுக்கல்களை ரசிக்கின்ற 
நண்பர்கள் இருக்கின்ற 
நம்பிக்கையில் - உள்ளத்துள் 
ஒழியாமல் வெளிவர 
துடிக்கின்ற மகிழ்ச்சியின் 
தூண்டுதலில் - நானும் 
தனிமையும் சந்திக்கின்ற 
வேளைகளில் - கணிணி
விசை பொத்தான்களின் வழி 
வலைப்பூச்செடிகள் நடுகிறேன்..!

இதய மேகங்கள் - இணைய 
வெளியினில் விதைகள் தூவ 
நிலம் , நீர் காற்றின்றி - உணர்வு 
கொண்ட நெஞ்சங்களில் நிகழ்ந்திடும்
அதிசய வேளாண்மை இது ..! 
பூத்துக்குலுங்கும் நாள் வரும் ..!

             இவண்,
             - பெரமநாதன் சத்தியமூர்த்தி