Tuesday, June 28, 2011

மேயாத மான் .. மேயாத மான் ..!


நாடகங்களில் வள்ளி திருமண நாடகத்திற்கு தனிப் புகழ் உண்டு.இன்னும் எத்தனையோ திருவிழாக்களில் இந்த நாடகம் ஒரு சடங்காகவே ஆழ்ந்து விட்டது. பக்கத்துக்கு ஊர்ல தவறாம இந்த நாடகம் போடுவாங்க. பார்க்க போனதே இல்ல. அப்ப கொஞ்சம் விவரம் தெரியாம போச்சு !

தொலைக்காட்சியில் "மேயாத மான்..மேயாத மான்" என்று டி.ஆர்.மகாலிங்கம்  இழுத்துகிட்டே போறத எங்கப்பா ரசிச்சு பார்க்கும் போது , எரிச்சல்தான் வரும். இப்பத்தான் அதுக்குள்ள இருக்கிற சங்கதி எல்லாம் தெரியுது. நம்ம ஆளுங்க காதல்  ரசனை மிக்கவர்கள்   என்பதற்கு இந்த நாடகமும் ஒரு சான்று. அதுவும் எப்படின்னுதான் பாருங்களேன். 


பின் புலம் :

குறவர் பணித்த காவல் பணியதனை
குறத்தி வள்ளி செய்திருக்க - மயிலேறி
குமரன் வந்தான் அவளை சிறை எடுக்க !


வேடன் வேடமிட்டு - "தொலைத்தேன்
வேட்டையாடி மான் ஒன்றை" என்றான்
வேட்டுவ குலத்தி வள்ளியும் திகைக்கவே !


"என் விழி போட்ட வேலிக்குள் அயல் மான்
எதுவும் நுழைந்திடக் காண்கிலையே "
என்றாளே விரிகண் குறத்தியும் !


விடுவானோ குமரன் ! அடுத்ததடுத்து 
விடுத்தான் வினாக்'கள்' கணைகளை
விடைகள் இல்லாமல் அவளும் தவித்திடவே !

[சலித்துப் போன வள்ளி ]
"சரி ! சொல்லிடு மான் அதன் அடையாளம்" 
சந்தமெடுத்து அவளழகை அழகன்  பாட
சரியாய் கேட்டுவிட்டாள் அறியாது !

[இந்த இடத்தில்தான் "மேயாத மான் .." என்ற இரு பொருள்
  பாடலை குமரன் பாடுகிறான்]

தப்பி ஓடிவிட்ட மானென்று
தன்னிடம் அகப்பட்டு நின்ற மானை
தமிழ் தேன் எடுத்து பாடி முடித்தான் அவனும் !


மரத்தன்ன மண்டையோடு இருந்ததை
மடந்தை அவள் உணர்ந்து கொண்டாள்
மன்னவன் வந்த சேதி புரிந்து கொண்டாள் !


வேலனை நினைந்துருகும் நெஞ்சமிது - இந்த
வேடனை மணப்பதில்லை "அறிவாய்"
வேறு பெண் பார்த்து வழி போவாய் ! [என்றாள்]


அண்ணன் ஆனை முகன் யானையாய்
அவளை துரத்த - கிழவனாய் தோன்றி காத்து
அணங்கவளை மணந்து காட்டினான் திரு உருவம் !

சினிமா பாட்டு :




காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே 

மேயாத மான் ....... !                                                     [1 நிமிடம்  40 வினாடிகள்  ]
புள்ளி மேவாத மான் !
மேவும் கான(க)மடைந்து நறு சந்தனமும் 
புனுகும் கமழும் களபங்கள் அணிந்து 
சுணங்கு படர்ந்து - புல் மேயாத மான் !
கானக் குறவ  கண்மணி என வளர் 
கானக் குயிலின் நிகர் குரல் உடையது !
மேயாத மான் !
தேனும் பாகும் தினை மாவும் 
தின்பதல்லால் - புல் ஒரு போதும் 
மேயாத மான் !                                                              [கற்பை புகழ்கின்றான்  ]

சாயாத கொம்பு ரெண்டு இருந்தாலும் 
அது தலை நிமிர்ந்து 
பாயாத மான் !                                                                 [18+]


மான் வரக் கண்டதுண்டோ?- ஒரு 
மான் வரக் கண்டதுண்டோ ?
பசும் புல் போலே நல் மேனி சுணங்கிட
*நவில் தமிழ் போல் அழகிய 
மான் வரக் கண்டதுண்டோ ?
                            
                                                         - தொலைந்த மானைத் தேடும் 
                                                            பிரேம் சத்யா 


<<--=== XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX===-->>


*நவில் - இது சரியானது என்று என்னால் உறுதி செய்ய முடியவில்லை . நானும் ஐந்தாறு முறை 
கேட்டுப் பார்த்தேன். கூகிளும் பாடல் வரிகளை எனக்கு தேடிக் கொடுக்கவில்லை. மற்ற வரிகளை 
இரண்டு மூன்று முறை கேட்டே எழுதிவிட்டேன் !


Monday, June 20, 2011

தேரோடு வீதி

 -- காதலும் காதல் சார்ந்த இடமும் ... !





(கண்களின் )
மின்னல்கள் சேமிக்கும் 
விஞ்ஞானம் போதித்தவளே !
இந்த காதல் நாத்தீகனை 
பக்தனாக்கி அருள் செய்தவளே !
தூரத்தில் இருந்தே 
நெருக்கத்தின் கதகதப்பை 
நெஞ்சுக்குள் மூட்டியவளே !

தேரும் நீ - அதில் 
ஏறும் தேவதையும் நீ 
உன்னை - நீ 
சுமந்தால்தான் அழகு !
இரட்டைச் சடை  - பூக்கள் 
மணக்கும் குட்டித்  தேர் வடம் !
எந்த தீர்க்க தரிசியோ 
சரியாக வைத்தான் 
அந்த தெருவுக்கு 
"தேரோடு வீதி " என்று !
வந்தாய் மழை 
மூட்டமாய் - பொன்னான 
பருவகாலம் தோறும்
விடாது கொட்டி தீர்த்தாய் 
இள(மை)  மழையை !

தென்றலின் சிறு 
மோதலுக்கு 
தெருமுனை 
தாண்டிவிடும் அதிசய 
இறகு நீ ! - கடந்து 
போகும் போது விசிறப்பட்ட 
காற்றுப் பட்டு 
வேர்த்து விறுவிறுத்து
நின்றவன் நான் !

உன் அழகை
அப்பிக்கொள்ளும்  வரை
காத்திருக்கும் - என்
இமைகளின் வலியினை
நீ பொறுக்காமல்
சட்டென்று ஓடிவிடுவாய்
வீட்டுக்குள் !

திடமான தேநீர் நிறத்து 
கட்டம் போட்ட - பள்ளிச்
சீருடையை துறந்து 
தாவணி உடுத்தி - நீ 
பவனி வந்த - அந்த 
"புனித வெள்ளி"க் கிழமைகள் !
இப்போது கவிபாடு
பார்ப்போம் என்று - என்
வார்த்தைகளை நீ
சிறை பிடித்து விளையாடிய
பொற்கிழமைகள் !

....................(போதும் போதும்)

என் முன் நிகழ்ந்த காலமாய் 
இருந்த நீ - கடந்த காலமாய் 
போய்விட்ட இந்நாளில் 
கண்களுக்கு எட்டாத 
தூரத்தின் பசுமையினை 
காலடியில் முளைக்க 
வைத்தாய் - ஏதோ ஒரு 
நண்பனின் முகவரி 
தேடப்போய் - டைரிக்குள் 
இருந்து தவறி விழுந்த 
(உன் புகழ் பாடும் )
பழங்கவிதை காகிதத்தின் வழி !

(அந்த )
"தேரோடிய" வீதிக்கு - திருவிழா 
பார்க்க வரும் திருவிழாவாய் 
ஆண்டுக்கு ஒருமுறை 
வந்து போயேன் - அழகான 
பெயர் அந்த வீதிக்கு விளங்கட்டும் !

                                                      - இவண்,
                                                        பிரேம் சத்யா 


<==[* அட ! ஐம்பதாவது பதிவை தொட்டாச்சு *
              படம்: மன்னார்குடி பெரிய கோயில் தேரோடத்தில் கிளிக்கியது ]==>



Saturday, June 18, 2011

வள்ளுவனோடு ஒரு குறள் விளையாட்டு



எல்லாமும் இருக்கிறதாமே  
வள்ளுவா உன் முப்பாலில்
எங்கே பார்ப்போம் என்
புலம்பல்களுக்கு ஆறுதலாய்
ஏதாவது சொல்லி வைத்து
இருக்கிறாயா  என்று  !
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.            மெய் உணர்தல் : 352


சராசரி உயரம் வளர்ந்த 
மனிதர்கள் - தலை 
இடித்துக் கொள்ளும் 
வாசல் நிலை படியை 
கை நீட்டி மட்டும் 
இடிக்க முடிந்த - அயிந்தேகால்
அடி "வளர்ந்தவன்" யான் !
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்(கு)
அச்சாணி அன்னார் உடைத்து.  வினைத் திட்பம்:667

போட்டா  போட்டி கொண்டு 
நூற்று கணக்கில் குறள்களை 
மனனம் செய்த பள்ளி பருவத்து 
ஞாபகங்கள் - கோனார்
விளக்க உரைகளை கரைத்து
குடித்த தேர்வு காலத்து
நினைவலைகள் - மீசை
அரும்பும்  இடம்
துடிக்க ஆரம்பித்ததும்
விரும்பி படித்த மூன்றாம் பால் !
எனினும் பத்து பதினைந்து 
இன்றதில் தட்டு தடுமாறி 
சொல்லி விட்டேனாயின்
பெரும் சாதனை  !

சூனியம் சூழ்ந்து
தொடர்புகள் அறுந்து
செறிவான சிந்தைகள்
சிதறி - பொதி சுமக்கும்
கழுதையாய் கொஞ்ச காலம்
நடத்திய  வாழ்வில்
கிட்ட தட்ட எல்லாமும்
போனதுபோல் ஒரு மாயை !
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.   கல்வி:391


பஞ்ச மா பாதகங்கள் ஏதும்
யான் செய்கிலை யாயினும்
என்னை நான் வளர்த்துக்
கொண்ட விதத்தில் - இன்னும்
திருப்தி இல்லையடா !
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.        தெரிந்து செயல்வகை:466

வெறும் அனுபவம் கற்று
ஆயிரம் கவிகள் பாடி
நீதி, நியதி என எல்லாமும்
புட்டு வைத்தாய் !
கூடுதலாய் , ஓங்கி
வளர்ந்த அறிவியல்
கைவயப் பட்டும் - என்னை
தைரியமாய் முன் நகர்த்த
இன்னும் தயங்குகிறேன்  !
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.    வினைத் திட்பம் :669


காதல் இன்பம் கண்டு ,
ஊதிய பொருள் வழி தேடி,
அதன் பின் தானே - நல்
அறம் செய்யும் பக்குவம்
யாருக்கும் வாய்க்கும்
பொதுவாய்  ! - நீ
அறம் , பொருள் , இன்பம் 
என்று வரிசை கட்டியதன்
ரகசியம்தனை வந்துரை
மெதுவாய் !
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.    காதற் சிறப்புரைத்தல்: 1125

[ தெரியும் தத்தானே - நீ மட்டும் 
   மூன்றாம் பாலை முதலில் 
   தொடங்கி இருந்தால் - ஊரில் 
   இருந்த ஒட்டு மொத்த 
   பனை மரங்களையும் மொட்டை
   அடித்து ஓலை பற்றாக்குறை 
   செய்திருப்பாய் !]


ஏமாளியாக - கோமாளியாக
எனக்கு வேடம் கட்டிவிட்டு
ரசித்தவர்களுக்கு ஏது சொல்வேன்?
முக துதி பாடி , முதுகுக்கு பின்
பழி பாடினியர்களை - ஏது செய்வேன்?
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயர்க்கு.  புறங்கூறாமை:190


நுட்பமாய் என்னையும் 
தாக்குகிறாயோ? அவர்கள் 
பற்றி உன்னிடத்தில் பழித்து 
விட்டேன் என்று ! - சரி !
பொருந்தாது பேசிய 
வாய்களில் இருந்து 
இரண்டு ஒரு பற்களை 
வெளியில் எடுத்துவிட 
துடிக்கும் - கோபம் 
குடித்து விட்டேனே !
நீ என்னை விரல் சூப்ப
சொல்கிறாயா ?
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.     பொறையுடைமை:155


ஓகோ ! பழி வாங்க 
துடிக்கும் அகந்தையை 
கிள்ளித்தான் போட
வேண்டும் போலும் !
பெருங்கிழவா ! இயன்றவரை 
முயற்சிக்கிறேன் !
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.     ஆள்வினை உடைமை:616


போதும் பெரும் புலவரே !
இத்துடன் நிறுத்திக் கொள்வோம்
விளையாட்டை ! - நினைத்தேன் !
புதிதாய் எனக்காய்
எழுத தேவை இருக்காது
என்றெண்ணி எழுத்தாணி
எடுக்காமல் வந்த போதே
நினைத்தேன் ! என்னை பொடியன்
என்று கருதி விட்டாய் !
இரு ! இரு ! இந்த வாழ்வென்னை
பெரு நடை அழைத்து சென்றால்
உன்னை துளைத்தெடுக்கும்
புத்தி கூர்மை செய்து விடுகிறேன் !

                                                   வள்ளுவப் பேரன் ,
                                                    - பெரமு 
             <====== XX======>

குறள் விளக்கத்திற்கு சுட்டெலியை [Mouse]
குறள் மீது நகர்த்தவும் 

Tuesday, June 7, 2011

கலியுக சித்தன்




உலகம் எங்கோ வந்துவிட்டது. சொல்லப்படாத விசயங்கள் இல்லை. நீதி நூல்களுக்கும் பஞ்சமே இல்லை. இருந்தும் போர்களும் , சமாதானங்களும் இன்னும் தொடர்கதைதான். என்னை நேர்த்தி செய்து கொள்வதே பெரும்பாடாய் இருக்கும் போது உலகை திருத்துகிறேன் என்று நரம்பை புடைக்க விட்டு எதையோ கிறுக்குவதெல்லாம் வேலைக்கே ஆகாது !
இன்னைக்கு நம்ம அவதாரம் "கலியுக சித்தன்" பித்தனாக எதையோ சொல்லனுமுன்னு ஆசை படுறாரு.சித்தர் பாட்டெல்லாம் படிச்சது கிடையாது.
மேலோட்டமா ஒன்னு ரெண்டு வாசித்ததுண்டு.திடீர்னு மூளைக்குள்ள சின்ன 
விசயம் தோணுச்சு. அவங்க பாடெல்லாம் அடுத்தவங்களுக்காக மட்டும் இல்லாமல் தனக்கான தேடலின் புலம்பலாகவும் இருக்குது. நிறைய கேள்வி கேட்டு பகுத்தறிவின் தொடக்கமாக இருந்தவர்கள் அவர்கள். இந்த சித்தனின்  சிறு குழப்ப முயற்சியும் எந்த கேள்விகளுக்கும் விடை சொல்வதற்கல்ல - தேடலுக்கான சிறு பொறியை பற்ற வைப்பதுதான் !

யாரோ நான் - அழுது
கொண்டே பிறந்த போது
எழாத சந்தேகம் - இப்போது
வந்தென்னை  திருகுவதேனோ ?
ஏதோ ஒரு நாள் எல்லோரையும்
அழவைத்து போமுன்னே 
விடையும்தான் காண்பேனோ ?

மெத்த படித்தவனாய் 
வேடம் கட்டும் போது 
புத்தி தீட்டி கூறு போடுகிறேன் !
சிறு வயதில் வாய் பிளந்து 
கண்கள் விரித்த சங்கதிகள் 
எல்லாம் - வெறும் இணையத்து
தேடு பொறி சொடுக்கில் 
சக்கை சக்கையாய் 
மிஞ்சுவதை காண்கின்றேன்  !

பல நூற்றாண்டுகளாய் 
அவன் சொன்னது  
இவன் கண்டது  
அயிரோப்பிய இறக்கு"மதி"
ஆசிய ஏற்று"மதி" என 
அறிவு கருவூலம் - உலகின் 
யாவருக்கும் பொதுவாய்
நிறைந்து கொண்டு இருக்கிறது !
அதில் கிட்டிய கையளவு கொண்டு 
சமைத்துண்ணும் நான் - எப்படித்தான் 
திமிர் கொள்வது அறிவாளி என்று !

தலைகணத்த மடையர்களுக்கு 
எப்படித்தான் தைரியம் வருகிறதோ 
மொத்த கருவூலத்தையும் 
தூக்கி சுமப்பேன்  என்று கங்கணம் 
கட்டி கொள்ள ! 

மோட்சம் , பரா சக்தி என்றதும் 
மோட்டு வளையை பார்ப்பது 
நம் பழம் பழக்கம் - அப்படி 
அண்ணாந்து பார்த்து நானும் 
கேட்டுப் பார்த்தேன் 
சுய புத்தி , என் அறிவு என்னவென்று !

சன்னல் , கதவு 
இண்டு, இடுக்கு என 
அனைத்தையும் திறந்து 
வைத்தேன் - விடை 
வரும் என்று எண்ணி 
விழி பூத்து போனதுதான் 
மிச்சம் !  

யோசித்து சிந்தை களைத்த 
பொழுதொன்றில் - அறிவு 
சுமை இறக்கி வைத்து விட்ட 
வெள்ளந்தியாய்  நான் மாற 
உள்ளத்து இரைச்சலில் 
இதுநாள் வரை என் காதுகளில் 
விழாத அந்த இரகசியத்தை 
மெல்ல கிசு கிசுத்தது 
இதயம்  - கலை ! கலை ! என்று !

நெற்றி பொட்டின் நாடி முடிச்சு 
சுண்டி தெறித்தது - கலையும் 
அதை செய்யும் நயமும் தான் 
என் சொந்த புத்தி , அறிவென்று !

---------------------------------------------------------------------------------------------------------


சலங்கை , தூரிகை - ராகம் , தாளம் 
பாட்டு , மெட்டு - இவைதான் 
கலைகள் என்று யார் சொன்னது ?
உண்மையில் - வாணிபம் 
விரிக்கப்பட்ட உலகச் சந்தையில் 
இன்று இந்த கலைகள் 
யாருக்கு சொந்தம் ?
திருமகளுக்கா ? கலைமகளுக்கா ?
விருப்பு , வெறுப்பு கடந்து 
லாபம் எண்ணும் கணக்குகள் மறந்து 
ஒட்டு மொத்தத்தையும் ஒரு சிறு
புள்ளியில் அடக்கிவிடும் 
எதுவும் கலை ! படைப்பு ! தனித்துவம் !

பிழைப்பை தாண்டிய வாழ்வு 
அருளப்பட்ட யாவரும் 
எங்கேனும் , எப்போதேனும் 
கலைக்  குமிழ்கள் - உங்கள் 
இதயத்துள் முளைக்குமாயின் 
வெட்டியாய் கழிக்கும் 
பொழுதுகளில்  சிறு பொழுது
அரட்டையில் அரை நாழி 
இருக்காதோ சொல்லுங்கள் ?  
அதற்காய் அர்ப்பணியுங்கள் !
உலகம் உய்க்கும் !

"யாரடா நீ புத்தி சொல்ல 
வந்து விட்டாய் ?" என்பீரோ !
முன்னரே சொல்லி விட்டேன் 
என்னிடத்தில் இப்போதைக்கு 
விடை இல்லை என்றும்  !
அதுவே என் தேடல் என்றும் !

"பித்தன் இவன் பிதற்றுகிறான்"
என்பீரோ ! - நல்லது என் 
நிலை கண்டு இரங்கியமைக்கு !

விசயங்கள் உடன் ஒழுகிவிடும் 
ஓட்டை காதுகளும் - யானை 
பலம் கொண்டு மோதியும் 
திறவாத இதயங்களும் சற்று 
தள்ளியே இருங்கள் ! - நான் 
உங்களை சொல்லால் அடிக்க
நீங்கள் என்னை கல்லால் அடிப்பீர்கள் !

                                           - கலியுக சித்தன்