Monday, May 16, 2011

அவனும் அவளும் 4




அவள் :  இன்று உனக்கு 
ஒரு Test. சங்க பாடல்களில் 
செம்மண்ணோடு 
சேர்ந்த நீர் என்கிற உவமை 
மிக பிரபலம் ! 
அதை ஒரு ஏழை பெண் 
ஒருத்தியிடம் அவன் 
கணவன் எப்படி சொல்வான் ?

அவன் : ..........
நான் பாலில் 
நழுவி விழுந்த
பழம் அல்ல
நினைத்தால்
பிரிந்து போவதற்கு ! 
உன்னோடு 
திடமாய் சாயம்
ஏறிய தேநீர் ..!

அவள் : அடப்பாவி கொலை
பண்ணிட்ட எழுதுனவரு இப்ப
இருந்தா உன்ன
கொலை பண்ணிடுவாரு !
சரி ! ஒரு தலை காதலன் 
எப்படி சொல்லி இருப்பான்?

அவன் :  ஊ .ம்
உன் வெட்கத்தின் 
நிழலில் உலர்ந்த
மருதாணி கழுவப்பட்ட 
குவளை நீராய் என்
காதல் நெஞ்சம் !
அந்த மகிழ்ச்சியை 
அரை நாழி விட்டாயா?
வெயில் தெறிக்கும்
உன் கொல்லைபுறத்தில்
கொட்டிவிட்டாயே !

அவள் : இன்னும் சற்று நேரத்தில் 
காதலில் விழப் போகிறவர்களுக்கு
விழுந்து கொண்டு இருப்பவர்களுக்கு
எப்படி சொல்வாய் ? 

அவன் : (விட மாட்டாயோ )
நல்ல கணவன் வேண்டி 
அரச மரத்தடி பிள்ளையார் 
முன் நீ நின்றிருக்க - உன் 
நெற்றி குங்குமத்திற்காக 
இதுவரையில் - இலையின்
நுனியில் தொங்கி கிடந்த
ஒற்றை துளியாய் என் நெஞ்சம் !

என் காதல் துளி விழுந்ததும் 
துடைத்து விட்டு போவதும்
மீண்டும் குங்குமம் எடுத்து 
கலந்து கொள்வதும் - உன் 
கையில்தான் என் கண்ணே !

அவள் : கொஞ்சம் பெருசா இருக்கு !
இருதாலும் நல்ல கற்பனை !
இப்ப , முதல் காதல் பிரிந்து
மறு காதல் செய்பவர்களுக்கு ?
கொஞ்சம் கிராமிய நடையில் ...

அவன்: (சிக்கலான தலைப்பு !)
சனி மூலை கருக்கையில
மாரியாய் அந்த மவ
பிச்சு கிட்டு இறங்குவான்னு
பக்குவமா ஏ நிலத்த
கொத்தி வச்சேன் - தண்ணி
இரைச்சி உழுதும் வச்சேன் !
பொறுக்காத பெருங்காத்து
அவள வெறு பக்கம்
இழுத்து போச்சு !
சோறு  தண்ணி இல்லாம
"நா" வறண்டு கிடக்கையில
அழுது புரண்டு விட்ட கண்ணீரு
 சேறு குழச்ச சேதியெல்லாம்
 ஊர் கூடி சிரிக்க போகும் வேளையில
அடை மழையாய் வந்தவளே !
நெஞ்சை பிளந்துகிட்டு 
ஓடும் குருதிக்குள்ள 
கலந்தவளே ! - என்னை 
மறு முறை பெத்தவளே !

அவள் : யப்பா ! முடிச்சுட்டியா ?
போதும் தலைவா ! 
(அவனது ஒவ்வொரு பதிலுக்கும் 
 சரி வர புகழாத அவள் - அதை 
 ஆனந்தமாய் திரட்டி கண்களால் 
 அவளுக்கே தெரியாமல் அள்ளி 
 வீசி கொண்டிருந்தாள் . . !
 அந்த அர்ச்சனையில் அவனும் 
 ஆசீர்வதிக்க பட்டான் ..!)

No comments: