Monday, June 20, 2011

தேரோடு வீதி

 -- காதலும் காதல் சார்ந்த இடமும் ... !





(கண்களின் )
மின்னல்கள் சேமிக்கும் 
விஞ்ஞானம் போதித்தவளே !
இந்த காதல் நாத்தீகனை 
பக்தனாக்கி அருள் செய்தவளே !
தூரத்தில் இருந்தே 
நெருக்கத்தின் கதகதப்பை 
நெஞ்சுக்குள் மூட்டியவளே !

தேரும் நீ - அதில் 
ஏறும் தேவதையும் நீ 
உன்னை - நீ 
சுமந்தால்தான் அழகு !
இரட்டைச் சடை  - பூக்கள் 
மணக்கும் குட்டித்  தேர் வடம் !
எந்த தீர்க்க தரிசியோ 
சரியாக வைத்தான் 
அந்த தெருவுக்கு 
"தேரோடு வீதி " என்று !
வந்தாய் மழை 
மூட்டமாய் - பொன்னான 
பருவகாலம் தோறும்
விடாது கொட்டி தீர்த்தாய் 
இள(மை)  மழையை !

தென்றலின் சிறு 
மோதலுக்கு 
தெருமுனை 
தாண்டிவிடும் அதிசய 
இறகு நீ ! - கடந்து 
போகும் போது விசிறப்பட்ட 
காற்றுப் பட்டு 
வேர்த்து விறுவிறுத்து
நின்றவன் நான் !

உன் அழகை
அப்பிக்கொள்ளும்  வரை
காத்திருக்கும் - என்
இமைகளின் வலியினை
நீ பொறுக்காமல்
சட்டென்று ஓடிவிடுவாய்
வீட்டுக்குள் !

திடமான தேநீர் நிறத்து 
கட்டம் போட்ட - பள்ளிச்
சீருடையை துறந்து 
தாவணி உடுத்தி - நீ 
பவனி வந்த - அந்த 
"புனித வெள்ளி"க் கிழமைகள் !
இப்போது கவிபாடு
பார்ப்போம் என்று - என்
வார்த்தைகளை நீ
சிறை பிடித்து விளையாடிய
பொற்கிழமைகள் !

....................(போதும் போதும்)

என் முன் நிகழ்ந்த காலமாய் 
இருந்த நீ - கடந்த காலமாய் 
போய்விட்ட இந்நாளில் 
கண்களுக்கு எட்டாத 
தூரத்தின் பசுமையினை 
காலடியில் முளைக்க 
வைத்தாய் - ஏதோ ஒரு 
நண்பனின் முகவரி 
தேடப்போய் - டைரிக்குள் 
இருந்து தவறி விழுந்த 
(உன் புகழ் பாடும் )
பழங்கவிதை காகிதத்தின் வழி !

(அந்த )
"தேரோடிய" வீதிக்கு - திருவிழா 
பார்க்க வரும் திருவிழாவாய் 
ஆண்டுக்கு ஒருமுறை 
வந்து போயேன் - அழகான 
பெயர் அந்த வீதிக்கு விளங்கட்டும் !

                                                      - இவண்,
                                                        பிரேம் சத்யா 


<==[* அட ! ஐம்பதாவது பதிவை தொட்டாச்சு *
              படம்: மன்னார்குடி பெரிய கோயில் தேரோடத்தில் கிளிக்கியது ]==>



No comments: